திருவாய்மொழி 4-3 கோவைவாயாள்
4-3. கோவைவாயாள்
நம்மாழ்வார் · திருவாய்மொழி
Essence of this decad
"கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய்" — நப்பின்னைக்காக ஏழு எருதுகளின் கழுத்தை முறித்தவனையும், இலங்கை மன்னன் வீழச் சிலை வளைத்தவனையும் விளிக்கும் பதிகம். இரண்டு காதல் கதைகளையும் ஒரே பாசுரத்தில் வைக்கிறார். ஒருவரைப் பெறுவதற்காக அவன் எதையும் செய்வான் என்பதே இணைப்பின் பொருள்.
கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய்! மதிள் இலங்கைக் கோவை வீயச் சிலை குனித்தாய்! குலநல் யானை மருப்பொசித்தாய்! பூவை வீயா நீர் தூவிப் போதால் வணங்கேனேலும் நின் பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே
பூசும் சாந்து என் நெஞ்சமே புனையும் கண்ணி எனதுடைய வாசகம் செய் மாலையே வான்பட்டாடையும் அஃதே தேசமான அணிகலனும் என் கை கூப்புச் செய்கையே ஈசன் ஞாலம் உண்டுமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே
ஏக மூர்த்தி இரு மூர்த்தி மூன்று மூர்த்தி பல மூர்த்தி ஆகி ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற ர நாராயணனே! உன் ஆகமழுற்றும் அகத்தடக்கி ஆவியல்லல் மாய்த்ததே
மாய்த்தல் எண்ணி வாய் முலை தந்த மாயப் பேய் உயிர் மாய்த்த ஆயமாயனே! வாமனனே! மாதவா! பூத்தண்மாலை கொண்டு உன்னைப் போதால் வணங்கேனேலும் நின் பூத்தண்மாலை நெரமுடிக்குப் புனையும் கண்ணி எனதுயிரே
கண்ணி எனதுயிர் காதல் கனகச் சோதி முடி முதலா எண்ணில் பல்கலன்களும் ஏலுமாடையும் அஃதே நண்ணி மூவுலகும் நவிற்றும் கீர்த்தியும் அஃதே கண்ணன் எம்பிரான் எம்மான் கால சக்கரத்தானுக்கே
கால சக்கரத்தோடு வெண்சங்கம் கை ஏந்தினாய்! ஞால முற்றும் உண்டூமிழ்ந்த நாராயணனே! என்றென்று ஓலமிட்டு நான் அழைத்தால் ஒன்றும் வாராயாகிலும் கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரைகழலே
குரைகழல்கள் நீட்டி மண் கொண்ட கோல வாமனா! குரைகழல் கை கூப்புவார்கள் கூட நின்ற மாயனே! விரைகொள் பூவும் நீரும் கொண்டு ஏத்த மாட்டேனேலும் உன் உரைகொள் சோதித் திருவுருவம் என்னதாவி மேலதே
என்னதாவி மேலையாய் ஏர்கொள் ஏழுலகமும் துன்னி முற்றுமாகி நின்ற சோதி ஞான மூர்த்தியாய் உன்னதென்னதாலியும் என்னதுன்னதாலியும் இன்ன வண்ணமே நின்றாய் என்றுரைக்க வல்லேனே?
உரைக்க வல்லேன் அல்லேன் உன் உலப்பில் கீர்த்தி வெள்ளத்தின் கரைக்கண் என்று செல்வன்"! நான்? காதல் மையல் ஏறினேன் புரைப்பிலாத பரம்பரனே! பொய்யிலாத பரஞ்சுடரே! இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த யானும் ஏத்தினேன்
யானும் ஏத்தி ஏழுலகும் முற்றும் ஏத்தி பின்னையும் ! இன்ற செல்ல தானும் ஏத்திலும் தன்னை ஏத்த ஏத்த எங்கெய்தும்? தேனும் பாலும் கன்னலும் அழுதும் ஆகித் தித்திப்ப யானும் எம்பிரானையே ஏத்தினேன் யானுய்வானே
உய்வுபாயம் மற்றின்மை தேறிக் கண்ணன் ஒண்கழல்கள் மேல் செய்ய தாமரைப் பழனத் தென்னன் குருகூர்ச் சடகோபன் பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே